சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பொறுப்பில் இருந்து இலங்கை இராணுவத்தை நீக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது அச்சிடப்பட வேண்டிய சுமார் எட்டு லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேங்கிக் கிடப்பதோடு, போதிய அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால், இந்தப் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் பரிந்துரையின் பேரில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இதனால், மூன்று மாதங்களுக்குள், எட்டு லட்சம் ஓட்டுனர் உரிமங்களை அச்சடித்து, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பொறுப்பு இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version