மேலும் 5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள், புவியியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் விசேட கவனம் செலுத்தி, மூன்று மொழிகளிலும் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படுமெனவும் இதற்காக 7,500 பேர் நியமனங்களைப் பெறவுள்ளனர் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பௌதீக வளங்களோடு மனித வளத்தையும் பூர்த்தி செய்து பாடசாலை அமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்யும் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குவது பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பாடசாலை சீருடைப் பொருட்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை உணவுத் திட்டம் மற்றும் பரீட்சை அட்டவணை தொடர்பான பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கடினமான காலகட்டத்தை கடந்துள்ளதாகவும், தற்போது ஒரு தேசமாக முன்னோக்கிச் செல்வதற்கு கூட்டு முயற்சி தேவை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version