கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு சில்லறை விலை இருக்க வேண்டும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1,200 – 1,300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி 1,600 – 1,800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.

எனினும் கோழி இறைச்சியின் சில்லறை விலை அதிகரித்துள்ள போதிலும், மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.850- ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இதுவரை மொத்த விற்பனை விலையில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்தி செய்ய ஒரு பண்ணை உரிமையாளர் சுமார் ரூ.800-ரூ.900 வரை செலவழித்து 45 நாட்கள் பராமரிக்க வேண்டும்.

பண்ணை உரிமையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் இலாபம் ரூ.300 க்கும் குறைவாக உள்ளது, ஆனால் நேர்மையற்ற விற்பனையாளர்கள் சுமார் ரூ.400 இலாபம் பெறுகின்றனர். இருந்த போதிலும் கோழி இறைச்சியின் விலையை உயர்த்தி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருவதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலையில் சிதைவு காணப்படுவதாகவும், எனவே நிலையான விலையை ஸ்தாபிக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share.
Exit mobile version