க.பொ. த. சாதாரண பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மொரகஹஹேன கோனாபொல பழனொறுவ மகா வித்தியாலயத்தின் பிரதான வாயிலின் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் (41013) ஏ. குலரத்னவே இந்த பாராட்டுக்கு உரியவராவார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று காலை பரீட்சை நிலைய வாயிலில் கடமையிலிருந்தபோது மாணவி ஒருவர் கண்களில் கண்ணீர் வழிய பதற்றத்தோடு வந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி மாணவியிடம் விசாரித்த போது. எனது அட்மிஷனை (பரீட்சை அனுமதி அட்டை) கொண்டு வர மறந்துவிட்டேன். இன்னும் சில நிமிடங்களில் பரீட்சை ஆரம்பமாகிவிடும். என்னால் பரீட்சை எழுத முடியாது என கூறி அழ ஆரம்பித்துள்ளாள்.

பரீட்சை தொடங்க இன்னும் 8 நிமிடங்கள் மட்டுமே உள்ளதை உணர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன, பாடசாலை பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ ஜீப்பில் வந்திருந்த பொலிஸ் அதிகாரியிடம் விரைந்து சென்று மாணவியின் இக்கட்டான நிலையை தெரிவித்தார்.

மறுபேச்சின்றி பொலிஸ் அதிகாரி மாணவிக்கு உதவ அனுமதியளித்ததால், மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு நான்கு கிலோமீற்றர் தூரத்தில் நாகாஸ் சந்தியில் உள்ள மாணவியின் வீட்டிற்குச் சார்ஜன்ட் குலரத்ன அழைத்துச் சென்றார் .

இந்நிலையில் பரீட்சை நிலைய பொறுப்பாளரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறிய பொலிஸ் அதிகாரி , பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று பரீட்சைக்கான அனுமதி அட்டையை கொண்டுவருவதாக தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் செய்த உதவியால் மாணவி குறித்த நேரத்தில் பரீட்சையை எழுத முடிந்தது. இந்நிலையில் மாணவிக்கு சரியான நேரத்தில் உதவிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பல்லரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

Share.
Exit mobile version