கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு ட்ரோன் விமானத்தை அனுமதியின்றி பறக்க விட்ட பல்கலைக்கழக மாணவனை விமானப்படையினர் கைது செய்துள்ளனர்.

புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் 22 வயதான மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் ரயில் நிலையத்திற்கு அருகில் ட்ரோன் விமானத்தை பறக்க விட்டுக்கொண்டிருந்த போது, பம்பலப்பிட்டி ஓஷன் டவரில் அமைந்துள்ள விமானப்படை காவலரணை சேர்ந்த படையினர், அவரை கைது செய்துள்ளனர்.

பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு அதனை கொண்டாடுவதற்காக ட்ரோன் விமானத்தை வானில் பறக்க விட்டதாக மாணவன், விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவன் ட்ரோன் விமானத்துடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version