க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவன் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (02.06.2023) பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஐந்து மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற அறிவியல் பாடத்தின் முதலாம் நேர இடைவேளையின் போது குறித்த தாக்குதலுக்குள்ளான மாணவன் படித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது 5 மாணவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த மாணவனின் வயிற்றின் கீழ் பகுதியில் உதைத்து சிறுநீரில் இருந்து இரத்தம் வெளியேறும் வரை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்குட்பட்ட  மாணவன் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் களுத்துறை வலய கல்வி அலுவலகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version