பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர் கடன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் மீள செலுத்தப்படும் என மத்திய வங்கி இன்று அறிவித்தது.

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம், உரிமம் பெற்ற வங்கிகள் வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்க மதிப்பை எட்டலாம் எனவும் நம்பிக்கை வௌியிட்டார்.

மத்திய வங்கியின் நாணய சபை நேற்று கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க, SDFR எனப்படும் மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை 14 வீதத்திற்கும் 250 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கும் மத்திய வங்கியின் நாணயசபை தீர்மானித்துள்ளது.

பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்பட்ட போதிலும்,  கடுமையான நிதிக்கொள்கை காரணமாக, செப்டம்பர் மாதம் 70 வீத பணவீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்ததாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.

Share.
Exit mobile version