ஜனாதிபதி செயலாளருடைய இல்லத்திற்குள் நுழைய முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி சமன் ஏக்கநாயக்கவின் பாணந்துறை பின்வத்தை இல்லத்துக்குள் நேற்று (30.05.2023) பகல் நுழைய முயன்ற நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் வீட்டின் சுவரில் ஏறி குதித்து தோட்டத்துக்குள் நுழைந்த சந்தர்ப்பத்தில், அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரை பிடித்தபோது சந்தேகநபர் அவரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பின்வத்தை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸ் குழுவொன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் வெறிச்சோடிய வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காலி பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் எனவும், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Share.
Exit mobile version