யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும் பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்களை வழங்குவதற்கு வெளிவாரிக் கற்கைகள் பிரிவு இழுத்தடித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆண்டு வரை இறுதிப் பரீட்சைக்குத் தோற்றி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கப்பட்ட வியாபார முகாமைத்துவமாணி, வணிகமாணி, கலைமாணிப் பட்டதாரிகளே பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படாமையினால் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி உள்ளனர்.

இவர்களுக்குரிய காலத்தில் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படாமை குறித்துத் தாம் கடிதம் மூலம் துணைவேந்தருக்குத் தெரியப்படுத்தியதன் காரணமாகவே தமது பட்டச் சான்றிதழ்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகின்றன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்துக்கு நேரில் சென்று தமது பட்டச் சான்றிதழ்களை வழங்குமாறு கேட்ட போது, துணைவேந்தரிடம் முறையிட்டது போல துணைவேந்தரிடமே போய் பட்டச் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளுங்கள்:” என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுவதாகவும், அச்சிடுவதற்று வசதிகள் இல்லை, மட்டை வரவில்லை என்று ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காரணங்களைக் காட்டித் சான்றிதழ் வழங்குவதை இழுத்தடிக்கின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Share.
Exit mobile version