அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று விரல் அடையாளம் பதித்த பின்னர், ஒன்லைன் முறையின் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளம் பெறும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதாகவும், தபால் திணைக்களம் இந்த நடவடிக்கைகளுக்காக புதிய கூரியர் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் தரகர்கள் ஏதோ ஒரு வகையில் தலையிடுவதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகின. அதன் பிரகாரம், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

அதன்படி, நாங்கள் உருவாக்கிய புதிய திட்டத்தை ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வரலாற்றில் இந்த வேலைத்திட்டம் ஒரு திருப்புமுனையாகும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அடுத்த வருடம் 75 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. அந்த நேரத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அது திணைக்களம் அடைந்த பெரும் சாதனை என்றே கூற வேண்டும்.

Share.
Exit mobile version