கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) வாபஸ் பெறப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பொது பாதுகாப்பு அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், கடந்த ஆண்டு மே மாதம் 9ம் திகதி நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். .

மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, அதில் திருப்தியடைவதாகவும், அதனடிப்படையில் குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரினார்.

அந்த கோரிக்கை தொடர்பான மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவ பிரதானி சவேந்திர சில்வா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா ஆட்சேபம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ. மரிக்கார் ஆகியோர் மனுவை மீளப்பெற அனுமதித்தனர்.

பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர மற்றும் மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட முப்பத்தொன்பது பேர் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version