இந்நாட்டில் நாளாந்தம் சுமார் 44 மில்லியன் ஷொப்பிங் பேக்குகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஷொப்பிங் பேக்குகளின் பாவனை சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு நான்கு ஷொப்பிங் பேக்குகளைப் பயன்படுத்துவதாக பல்பொருள் அங்காடிகளின் சங்கிலித் தொடரில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.

நாட்டின் சனத்தொகையில் ஏறத்தாழ 11 மில்லியன் மக்கள் தினசரி சந்தைக்குச் செல்வதாகவும், ஒருவர் மூன்று அல்லது நான்கு ஷொப்பிங் பேக்குகளைப் பயன்படுத்துவதாகவும் இயக்குனர் குறிப்பிட்டார்.

இந்த ஷொப்பிங் பேக்குகளை சுற்றுச்சூழலில் அப்புறப்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றார். ஷொப்பிங் பேக்குகளின் அதிகப்படியான பாவனை தொடருமானால் அவற்றைக் கட்டுப்படுத்த பொலித்தீன் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், அப்படியானால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஷொப்பிங் பேக்குகளை பயன்படுத்த முடியாது எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தேவையில்லாமல் ஷொப்பிங் பேக்குகளை பயன்படுத்தாமல், கடைக்குச் செல்லும் போது துணி பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

Share.
Exit mobile version