வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அரச வங்கிகளில் கடன் பெற முடியாத விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இளைஞர்களிடையே இதுபோன்ற ஆர்வங்களை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும், ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் சொந்தமாக பண்ணை அல்லது கால்நடை வளர்ப்பை அனுமதிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தினது ஒரு பகுதியாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 இளைஞர்களுக்கு, 6.5% என்ற வட்டி வீதத்தில் 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாவை வழங்குவதுடன், அரச வங்கிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version