எதிர்வரும் மாதத்திற்குள் சீனியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்களிடம் காணப்படும் சீனி கையிருப்பு தொடர்பில் ஆராயுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறினார்.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை இறக்குமதியாளர்கள் ஏற்றுக்கொண்டதற்கமைய, அடுத்த ஒரு மாதத்திற்கு சீனி விலை அதிகரிப்பு தொடர்பான சிக்கல் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.

கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையையும் 195 ரூபாவை விட அதிகரிக்காதிருக்கவும் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளமைக்கு அமைய, வரி அதிகரிக்கப்பட்டாலும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்குமாறு நளின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

Share.
Exit mobile version