மாணவர் ஒருவரை, பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக, வாக்காளர் பெயர்ப்பட்டியலில், பெயரை உள்ளீர்ப்பதற்கு, 70 ஆயிரம் ரூபாவை கையூட்டலாகப்பெற்ற, குப்பியாவத்தை – மேற்கு கிராம சேவகர், கையூட்டல் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் மற்றும் அவரின் மனைவியின், 2022ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ள பெயர்களை, 2023ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளீர்ப்பதற்காக, தலா 10 ஆயிரம் ரூபாவை, குறித்த கிராமசேவகர் கையூட்டலாக பெற்றுள்ளார்.

அத்துடன், அந்தப் பெயர்களை கணினிமயப்படுத்தி, அதன் உறுதிப்படுத்தலை வழங்குவதற்காக, 50 ஆயிரம் ரூபாவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், இதற்காக குறித்த பெற்றோரிடம் அவர், 80 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில், 70 ஆயிரம் ரூபாவை கையூட்டலாகப் பெற்றுக்கொண்டபோது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version