கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐக்கி நாடுகள் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கி நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின.

அதில் கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9 சதவீதம் குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன.

இது 2010-ம் ஆண்டில் 9.8 சதவீதம் ஆக இருந்தது. 2020-இல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1.34 கோடி ஆகும். இதில் சுமார் 10 இலட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் குறை பிரசவம் அதிகபட்ச அளவாக (16.2%) பதிவாகி உள்ளது.

மலாவி (14.5%), பாகிஸ்தான் (14.4%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிரீஸ் (11.6%), அமெரிக்கா (10%) ஆகிய அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிக அளவில் பதிவாகி உள்ளது.

2020 ஆம் ஆண்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45 சதவீதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் போர், காலநிலை மாற்றம், கொரோனா வைரஸ் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய 4 முக்கிய காரணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்துள்ளன.

உதாரணமாக, காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 இலட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த 10 இல் ஒரு குழந்தை மனித உரிமை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

காலநிலை மாற்றம் கர்ப்பிணிகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது.

எனவே, காலநிலை மாற்றம் உள்ளிட்ட இடர்பாடுகளை தவிர்க்க கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version