களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சம்பவ தினத்தன்று மாணவியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து காவல்துறையினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

எனினும், அவரது தொலைபேசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாணவி உயிரிழந்ததையடுத்து பிரதான சந்தேகநபர், முன்னதாக விடுதியிலிருந்து சென்ற தமது நண்பரையும், நண்பரின் காதலியையும் மீண்டும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து, மாணவியின் தொலைபேசியை தொடருந்து மார்க்கத்துக்கு அருகிலுள்ள கால்வாய் நோக்கி வீசியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல விடயங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மாணவி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை முன்னெடுக்கும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

தன்னுடன் இருந்த போது குறித்த சிறுமிக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், ”நான் இன்று வீட்டிற்கு சென்றால் மாட்டிக்கொள்ள போகிறேன்” என்று அவர் கூறியதாகவும் சந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குறித்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version