உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து, ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க பயங்கரவாதத்திற்கான பொருட்கோடலை பயன்படுத்துவது, உண்மைத்தன்மை மற்றும் சட்டபூர்வத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் எதேச்சையான முறையில் சுதந்திரம் பறிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் தடை செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 விடயங்கள் குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சித்திரவதைகள் மற்றும் காணாமலாக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்தல், நீதியான வழக்கு விசாரணையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு சட்டமூலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு முழுமையாக பொருந்தவில்லை எனவும் ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share.
Exit mobile version