இலங்கை வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

உலகிலுள்ள பல நாடுகளில் FM அலைவரிசைகளின் பயன்பாடு குறைவடைகின்ற நிலையிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு தாமரை கோபுரத்தின் ஊடாக வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு முதற்கட்டமாக வானொலி டிஜிட்டல் சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, வானொலி டிஜிட்டல் சேவை VHF அலைவரிசை ஊடாக ஒலிபரப்பப்படவுள்ளது.

டிஜிட்டல் வானொலி சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான முதலீட்டை, உள்நாட்டு முதலீட்டின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பயன்படுத்தப்படும் FM வானொலிகளை நவீனமயப்படுத்த மேம்பாட்டு நவீன கட்டமைப்பொன்று பொருத்தப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் FM அலைவரிசைகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை 54 வானொலிகளுக்கு FM அலைவரிசைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் வானொலி சேவைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கான அரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேலசிரி ரணதுங்க தெரிவிக்கின்றார்.

டிஜிட்டல் வானொலியை ஆரம்பிப்பதற்கான வசதிகள் கொழும்பு தாமரை கோபுடத்தில் உள்ளமையினால், அந்த இடத்திலிருந்தே டிஜிட்டல் வானொலியை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

டிஜிட்டல் வானொலி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அலைவரிசைகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேலசிரி ரணதுங்க தெரிவிக்கின்றார்.

Share.
Exit mobile version