நாட்டில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அந்த பதினான்கு வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்திய கடன் திட்டத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவீத மருந்துகளை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கடன் திட்டத்தில் இருந்து பெறப்பட உள்ளன.

எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மருந்துப் பற்றாக்குறையை மட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறுகிறது. இதேவேளை இந்தோனேசிய கடன் திட்டம் மூலமும் இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ விநியோகம்) வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version