எக்ஸ்பிரஸ் பேர்ல் அனர்த்தம் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்றமை தொடர்பில் இழப்பீடு கோரி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் இலங்கை நாளை சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

வழக்கை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளபோதும், வழக்கின் பிரதிவாதிகள், கப்பலின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர், நடத்துநர் மற்றும் முகாமையாளர்கள் உட்பட வணிக இருப்பு சிங்கப்பூராக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பேரழிவு தொடர்பான உரிமைகோரல் நடவடிக்கையை நிறுவுவதற்கு சிங்கப்பூர் பொருத்தமான இடமாக இருக்கும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் துகள்களால் இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு நீண்டகாலமாக ஏற்படும் சேதத்தின் முழு அளவு மற்றும் ஈர்ப்புத்தன்மை குறித்த இந்த நடவடிக்கை, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 மே 20ஆம் திகதியன்று 1488 கொள்கலன்களுடன் சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது.

அதில், 25 தொன் நைட்ரிக் அமிலம், 348 தொன் எண்ணெய் மற்றும் 75 பில்லியன் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உட்பட ஆபத்தான பொருட்களுடன் மொத்தம் 81 கொள்கலன்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version