நாட்டில் அதிகரித்து வரும் பிரதான உணவின் விலையை குறைப்பதற்காக இந்தியாவில் இருந்து கோழியை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் இருந்து மலிவு விலையில் முட்டைகளை விநியோகிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தைத் தொடர்ந்து கோழியை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முட்டையைப் போன்று கோழி இறைச்சியையும் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் கோழிக்கறியின் அதிக விலைக்கு விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்வாக்கே காரணம் என பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் ஊடாக மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டங்களை வகுத்துள்ளது.

இருப்பினும், இந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு மட்டுமே விற்கப்படும், நாடு முழுவதும் விநியோகிக்கப்படாது.

இலங்கையில் முட்டை உற்பத்தியாளர்கள் நுகர்வோரை சுரண்டுவதாகவும், இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இந்தப் பிரச்சினையை தீர்க்கும் என்றும் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார்.

கோழிக்கறி இறக்குமதி இன்னும் பரிசீலனை நிலையிலேயே உள்ளதுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version