திருகோணமலை – சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு மதிய உணவில், நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படும் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு செயலைச் செய்த ஆறு மாணவர்களின் எதிர்காலத்தை கருதிற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவன், தனது வகுப்பில் கல்வி கற்கும் ஆறு சக நண்பர்களையும் மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தை உணவில் கலந்ததாக கூறப்படும் ஆறு மாணவர்களையும் அழைத்து எச்சரித்தால் போதும் என நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் பொலிஸாரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆறு மாணவர்களையும் மன்னிக்க முடிவு செய்திருப்பதை தாமும் பாராட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version