மக்கள் அச்சமடையும் விடயங்களே சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

‘நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியமே ஒரே தீர்வு என்று அரசாங்கமானது தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஹர்ஷ டி சில்வா எம்.பி சபைக்கு கூற முற்பட்டபோது நிதி இரஜாங்க அமைச்சர், அதனை கூறி மக்களை அச்சத்துக்குள் தள்ள வேண்டாம் என்று கூறினார்.

சர்வதேச ஊழியர்மட்ட உடன்பாட்டில் பொதுமக்கள் அச்சமடையும் விடயங்களே உள்ளடங்கியிருப்பது இதனூடாக உறுதியாகின்றது.

பொறுப்புடன் ஒரு விடயத்தை கூறுகின்றேன். மார்ச் மாதம் 02 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த ஆர்டிக்கல் 4இல் ஐந்து நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன.

வரியை அதிகரித்தல், வரி விலக்கை இல்லாமல் செய்தல், ரூபாயின் பெறுமதியை மிதக்க செய்தல், அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல், ஊழலுக்கு எதிராக போராடுங்கள் என்ற ஐந்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இதில் ஐந்தாவது விடயத்தை தவிர ஏனைய நான்கு விடயங்களும் முன்னெடுக்கப்படுகின்றன’ என்றார்.

Share.
Exit mobile version