நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் தலைமையில் இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத்தை வலுப்படுத்தும் புதிய சட்டமூலமொன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்த நிலையில், அமைச்சரவையின் அங்கீகாரம் விரைவில் பெறப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version