சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் ஜனாதிபதியின் கடமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version