கொழும்பில் பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்கிரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சட்டமா அதிபர், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தமது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றில் தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடுமாறும், மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் வழங்கப்படும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version