2022 ஆம் ஆண்டிற்காக வரவு செலவு திட்டம் இனி யதார்த்தமானது அல்ல என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனால் விரைவில் புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதனூடாக வருமான வரியை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையை இலங்கை உடனடியாக முகாமைத்துவப்படுத்த வேண்டும் எனவும், நாடு பேரழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது எனத் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு வருடங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை.

கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம் வரிகளை குறைத்ததாகவும் அதன் பலனை இன்று அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நாணய நிதியத்தில் சேராதது உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பங்களித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

Share.
Exit mobile version