இலங்கையில் இருந்து 10,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மலேசிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் இன்று அறிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரவணன் தெரிவித்ததாக மலேசிய ஊடகமான மலேசியா நவ் தெரிவித்துள்ளது.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10,000 தொழிலாளர்களின் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய மனிதவளத்தை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்காக வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்கு செப்டெம்பர் 14ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்படும் துறைகளில் உள்ள வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கத்தை ஆதரிக்க மலேசிய தொழில்துறைகள் மற்றும் முதலாளிகளை அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சகத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர் மேலாண்மை பிரிவு (oscksm@mohr.gov.my) அல்லது தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறை (jtksm@mohr.gov.my) ஆகியவற்றை மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

Share.
Exit mobile version