ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தபடி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கட்சித் தலைமை தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு குற்றப்பத்திரத்தை சமர்ப்பித்து பின்னர் கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதுடன், இவ்விடயம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாகவும், இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட லசந்த அழகியவண்ண பொருளாளராகவும் செயற்படுகின்றனர். கட்சி உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் பிரதிச் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இதன்படி, இவர்கள் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version