ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 155.7 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 273.5 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு நிகர மதிப்பு அதிகரிப்பைக் கண்டது உலகின் முதல் 10 பணக்காரர்களில் அதானி மட்டுமே. இந்த ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை முதன்முதலில் முந்தினார் அதானி. அதே போல கடந்த மாதம் உலகின் நான்காவது பணக்காரரான மைக்ரோசொப்ட் நிறுவனரான பில் கேட்ஸை விஞ்சினார்.

மார்ச் 2022 பங்குச் சந்தை தகவலின்படி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன்ஸ் ஆகிய நிறுவங்களின் 75% பங்குகளை அவர் வைத்திருக்கிறார். அதானி எரிவாயு நிறுவனத்தில் 37 சதவீதமும், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 65 சதவீதமும், அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தில் 61 சதவீதம் பங்குகளையும் அதானி வைத்துள்ளார்.

ரிலையன்ஸ் குழும தலைவரான அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையில் 8ஆவது இடத்தில் உள்ளார்.

Share.
Exit mobile version