அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லை காரணமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது, மற்றும் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழ மரங்களுக்கு பலத்த சேதத்தை விளைவிப்பதுடன், வீடுகளுக்கு மேலாக பாய்ந்து செல்வதால் வீட்டின் ஓடுகளும் சேதமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு குடியிருப்புகளுக்குள் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து சமயலறையிலுள்ள உணவுப் பொருட்களை உண்டு நாசப்படுத்துகின்றன.

மேற்குறித்த பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பயிர்செய்யப்பட்டுள்ள கொய்யா, வாழை, மா போன்ற பழ மரங்களின் பிஞ்சுகளை கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் தமது விவசாய முயற்சிகளை தொடர முடியாதுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு அணில்களையும் குரங்குகளையும் அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து சனநடமாட்டம் இல்லாத வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.

Share.
Exit mobile version