கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியொருவரை ஸ்கேன் அறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதாக குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆரம்ப சிகிச்சையின் பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பரிசோதனைக்கு தயாராகி படுக்கையில் கிடந்த சிறுமியை மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

நோயாளர் அறைக்கு அழைத்து வரப்பட்டபோது சிறுமி அழுது கொண்டிருந்ததாகவும் தாதியிடம் விசாரித்தபோது, ஸ்கேன் அறையில் தனக்கு ஏற்பட்ட விபரீதத்தை வெளிப்படுத்தினார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நோயாளர் அறைக்கு பொறுப்பான மருத்துவர் வழங்கிய தகவலின் பேரில் வைத்தியசாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஜானகி வருஷஹென்னடி நோயாளியை பரிசோதித்து, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்று அறிவித்தார்.

எனினும், நோயாளியின் முறைப்பாட்டை புறக்கணிக்க முடியாது என்பதால் காலி பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

Share.
Exit mobile version