விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று(31) காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு  ஸ்தலத்தில்  மரணமடைந்திருந்ததுடன்  சம்பவ இடத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய  அக்பர் அலி பாத்திமா அஸ்பா  என்பவராவார்.

இந்நிலையில்.சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.

இதையத்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில்  வைக்கப்பட்டிருந்த  பல்கலைக்கழக மாணவியின் சடலம்   சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி  பிரேத  பரிசோதனையை மேற்கொள்ளுமாறு  சட்ட வைத்திய அதிகாரிக்கு  பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர்  கட்டளையிட்டார்.

மேலும் குறித்த விபத்தில்  பல்கலைக்கழக மாணவியின்   தலைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இம்மரணம் சம்பவித்துள்ளது என  பிரேத பரிசோதனையில’ குறிப்பிடப்பட்டு  பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

Share.
Exit mobile version