புகையிரத பராமரிப்புக்கு தேவையான உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று (29) முதல் மறு அறிவித்தல் வரை பல புகையிரதங்களின் சேவைகளை புகையிரத திணைக்களம் இரத்து செய்துள்ளது.

புகையிரதங்களின் பராமரிப்புக்கு தேவையான உதிரிப் பாகங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மலையக புகையிரத மார்க்கம், களனிவெளி புகையிரத மார்க்கம் மற்றும் கரையோர புகையிரத மார்க்கத்தில் ஈடுபடும் பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

இரத்து செய்யப்பட்ட புகையிரதங்களில் அளுத்கம, அம்பேபுஸ்ஸ, கொழும்பு கோட்டை மற்றும் ஹோமாகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் இயங்கும் தலா இரண்டு புகையிரதங்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகையிரதங்களில் பயணிகள் புகையிரதங்கள் மற்றும் அலுவலக புகையிரதங்கள் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உரிய உதிரிபாகங்களை கொள்வனவு செய்து, புகையிரதங்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Share.
Exit mobile version