நாட்டின் மூன்று பகுதிகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெலியத்த, வெல்லம்பிட்டிய மற்றும் கட்டான பிரதேசங்களில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

பெலியத்த, தாராபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத ஒருவரால் நேற்று (23) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள பேக்கரிக்குள் வைத்து 37 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

பேக்கரியின் முன்னாள் ஊழியர் ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொஸ்லந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றுமொரு வாள்வெட்டுச் சம்பவம் கட்டான சமுர்திகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் 47 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கட்டானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version