முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஜுலை மாதம் 14ம் திகதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி ஆகியோர் மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் பயணித்திருந்தனர்.

சுமார் ஒரு மாத காலத்தை அண்மித்து, சுற்றுலா விஸாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.தாய்லாந்து வெளிவிவகார அமைச்சும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அடைகலம் வழங்கும் வரை, தமது நாட்டில் அவருக்கு தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், ராஜதந்திர கடவூச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version