மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வரும் இலங்கையர்களை மலேசியா குடிவரவுத்துறை கண்காணித்து வருகிறது. இந்தநிலையில் மலேசியா வாரம் ஒன்றுக்கு குறைந்தது 20 இலங்கையர்களுக்கு நாட்டுக்குள் செல்ல அனுமதி வழங்க மறுத்துள்ளது.

சுற்றுலா விசாக்களை பணிபுரியும் விசாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மலேசியாவிற்கு வருகை தரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் வருகை விசா வைத்திருப்பவர்களை ஆய்வு செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் குறைந்தது 20 இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைவதற்கு ஒப்புதல் அளித்த பலர் தாங்கள் வேலை முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் இல்லாத கடுமையான மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.

இதன்காரணமாக அவர்கள் மனித கடத்தலுக்கு பலியாகின்றனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு இன்று தெரிவித்துள்ளது.

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் 2022 ஜூன் 30 ஆம் திகதியன்று முடிவடைந்தது. இதனையடுத்து மலேசிய சட்ட அமுலாக்கல் பிரிவுகள் செல்லுபடியாகும் விசா இல்லாத வெளிநாட்டினரை கண்டு பிடிக்க தொடர்ச்சியான சோதனைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த சோதனைகளின்போது செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவுடன் அவர்கள் ஒரு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

அத்துடன் சொந்த செலவில் அவர்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

எனவே வெளிநாட்டில் வேலை தேடும் இலங்கையர்களை முறையான மற்றும் உண்மையான வழிகளில் வேலை செய்யுமாறு இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி அறிவுறுத்தியுள்ளது.

Share.
Exit mobile version