சட்ட வழிகளில் அதிக பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக தாம் முன்வைத்த இரண்டு ஆலோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கர தெரிவித்துள்ளார்.

அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவு (duty-free allowance) தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார்.

மேலும் சட்ட வழிகளில் அனுப்பப்படும் பணத்தில் 50%க்கு இணையான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இரட்டைப் பிரஜைகளுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் முன்மொழிவுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியதாக அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் அனுமதிச் சீட்டைப் பெற்றவுடன் அவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Share.
Exit mobile version