தில்லி அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட மேலும் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தில்லி அணியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

ரிஷப் பந்த் தலைமையிலான தில்லி கேபிடல்ஸ் அணி, வரும் புதன் அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக புணேவில் விளையாடவுள்ளது.

கடந்த வாரம் தில்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தில்லி அணியில் மேலும் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டு வீரர் மற்றும் பணியாளர் என இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளைக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது தில்லி அணி. இதனால் தற்போது தில்லி வீரர்கள் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சியும் ரத்தாகியுள்ளது. இன்று புணேவுக்கு தில்லி அணி வீரர்கள் செல்வதாக இருந்த நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான தில்லி அணியின் அடுத்த ஆட்டம் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Share.
Exit mobile version